தூத்துக்குடி கடற்கரையில் அரியவகை கடல் ஆமைகள் தொடர்ந்து இறந்த நிலையில் ஒதுங்கி வருகின்றன.
கடல் பகுதியில் கடல் ஆமைகள் அதிக அளவில் காணப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு, பெரியதாழை, புன்னக்காயல் முதல் தூத்துக்குடி, கீழவைப்பார் முதல் வேம்பார் வரையிலான பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு வந்தன. தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆமைகள் வரத்து குறையத் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் குறைந்த அளவிலான சிறிய படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருகின்றன. அதே போன்று கடற்கரையோரங்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. இதனால் கடலில் ஆமைகளுக்கு தொந்தரவு குறைந்து இருப்பதால், அதிக அளவில் தூத்துக்குடி கடல் பகுதியை நோக்கி ஆமைகள் வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த சில வாரங்களாக தூத்துக்குடி கடற்கரையோரம் அரியவகை கடல் ஆமைகள் இறந்த நிலையில் ஒதுங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் 2 ஆமைகள் இறந்த நிலையிலும், ஒரு ஆமை உயிருடனும் ஒதுங்கின. உயிருடன் ஒதுங்கிய ஆமையை கடலில் விட்ட போதிலும், அந்த ஆமை இறந்து ஒதுங்கியது. இந்த ஆமை மஞ்சள், பச்சை கலந்த நிற ஓட்டுடன் காணப்பட்டன. . இந்த ஆமைகள் காற்று காரணமாக பாறைகளில் மோதும் போது, காயம் ஏற்பட்டு கரை ஒதுங்குவதாக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ரகுவரன் கூறினார்.