ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் – தூத்துக்குடி

தென்மாவட்டத்தில் முதலாவதாக மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் கங்கைகொண்டான் முதல் மணியாச்சி வரையும், கடம்பூரில் இருந்து தட்டப்பாறை வரையும் நடைபெறும் பணிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) முடிக்க ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதனால் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது தென்மாவட்டத்தில் முதலாவதாக மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நேற்று ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் நடந்தது. இதற்காக ஏற்கனவே அமைந்து உள்ள தண்டவாளத்தை ஒட்டி புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டு இருந்தது. புதிய தண்டவாளத்தில் மணியாச்சியில் இருந்து ரயில் இன்ஜின் மட்டும் இயக்கப்பட்டது. இந்த ரயில் இன்ஜின் தட்டப்பாறை வரை மெதுவாக வந்தது. இதில் ரயில்வே இன்ஜினீயர்கள் வந்து ஆய்வு செய்தனர். இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு, ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரயிலை இயக்கி ஆய்வு செய்ய உள்ளனர்.