தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுமக்களுக்கும் நிவாரணத் தொகை உட்பட பொது விநியோக திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொது மக்களும் பல்வேறு தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்கள் தங்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெறாமல் உள்ள நெசவாளர்களும் நெசவு பணியில் ஈடுபட்டு வருவதால் இவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்கள் தங்களுக்கும் நிவாரண தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் புதிய கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களின் பட்டியல், விலையில்லா 200 யூனிட் மின்சாரம் பெற்று பயன்பெறும் நெசவாளர்களின் பட்டியலுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உதவியை பெற்ற பட்டியலில் விடுப்பட்டுள்ள நெசவாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஊரடங்கு கால நிவாரண தொகை ரூ.2000 வழங்க கைத்தறி துறை இயக்குனர் அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் வழங்குவார். அதன்படி தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.