இயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்
“சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் எல்லாமே அது தான், அதை பலமுறை பலவழிகளில் யோசித்து இருக்கிறேன், பல தொழில்களில் முயற்சி செய்து தோல்வி அடைந்து இருக்கிறேன், என் தோல்வியில் இருந்து நான் ஒன்றை கற்றுக்கொண்டேன்.
பலரும் செய்யும் தொழிலை நாமும் செய்தால் வெற்றிபெற இயலாது, நமக்கு என்று ஒரு வித்தியாசமான பாதையை உருவாக்க வேண்டும் என்று யோசிக்கும் மக்களின் பிரச்சனைகளை நாம் தீர்த்து வைக்கும் தொழிலாக இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன், அதை மக்களின் ஆரோக்கியம் சார்ந்த தேர்வாக தேர்ந்து எடுத்தேன்….”
இப்படியாக தங்கள் தொழிலை மக்களின் ஆரோக்கியத்தை காப்பதற்காக உருவாக்கி இருக்கிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த க.சோமசுந்தரம் அவர்கள்.
நம் பல காலமாக பயன்படுத்தி வந்த இரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக இன்றைக்கு எல்லா பொருட்களிலும் இரசாயனங்களின் கலப்பு ஊடுருவிட்டது. மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை நாம் நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் மனித சமூகம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியதிருக்கும்.

இரசாயன உரம் இல்லாத இயற்கை முறை விவசாயம் ஏற்கனவே பல விவசாயிகளால் தொடங்கப்பட்டுவிட்டது. இதை எல்லா மட்டங்களிலும் கொண்டு செல்லும் போதுதான் இதன் பயனை எல்லோரும் அடைய முடியும்.
இந்த வகையில் இயற்கை உணவு பொருட்களை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் நுகர்வோருக்கு கொண்டு செல்வதற்காக HCORANIC.com என்ற இணைய தளத்தை க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர் தொடங்கியிருக்கிறார்.
உங்கள் குடும்பம் மற்றும் கல்வி பின்னணி பற்றி குறிப்பிடுங்கள்:
நான் சேலம் மாவட்டத்தை சார்ந்தவன், நான் BE (இயந்திரவியல்) 2௦13 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் கல்லூரியில் முடித்தேன், அதன் பிறகு மும்பையில் 1 வருடம் பணிபுரிந்துவிட்டு கடந்த 2 வருடங்களாக தொழில் செய்து வருகிறேன்,
என்னுடைய அப்பா பெயர் ப.கருணாகரன் தினக்கூலி அடிப்படையில் டிரைவர் ஆக பணிபுரிகிறார், அம்மா பெயர் க.ராஜாத்தி தினக்கூலி அடிப்படையில் செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார், என் தங்கை பெயர் க.சந்தியா வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
நீங்கள் HcOrganic.com நிறுவனத்தை தொடங்கியதற்கான பின்னணி காரணம் என்ன?
எங்கள் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள் நாங்கள் அந்த காலத்தில் அதிகமாக வேலை செய்தோம், 20km என்றாலும் நடந்தே செல்லுவோம், நோய் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தோம் என்று, இதை ஆழமாக யோசித்து பார்த்தால் அவர்கள் சாப்பிட்ட உணவு பழக்கம் முறையே ஆகும்,.
இரசாயன உரம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, குதிரைவாலி, செக்கில் ஆட்டிய எண்ணைய் அவர்கள் சாப்பிட்டார்கள் நோய் இல்லாமல் இருந்தார்கள், ஆனால் நாம் இரசாயனம் உரத்தை கலந்த உணைவை தான் சாப்பிடுகிறோம், இதை மாற்ற வேண்டும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவேண்டும் என்பதே நோக்கம்.
இதற்கு இணை நிறுவனர்கள் இல்லை, நான் இதற்கு முன் முயற்சி செய்த தொழிலில் இருந்தார்கள் ஆனால் என்னுடைய இந்த இயற்கை உணவு (Organic Product) பற்றிய தொழிலை செய்யலாம் என்றதும் விலகி கொண்டனர்.

உங்கள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் தற்போதைய நிலையைப் பற்றி குறிப்பிடுங்கள் :
விளைவிப்பவர்களே விலையை நிர்ணயிப்பவர்கள் என்ற தாரக மந்திரமே எங்கள் குறிக்கோள். எங்கள் நிறுவனம் www.HcOrganic.Com 2017 மார்ச் அன்று துவக்க பட்டது, நாங்கள் ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த அதே அலுவலகத்தில் 100 சதுர அடியில் துவக்கப்பட்டது, எங்கள் நிறுவனம் ஒரு E-commerce ஐ அடிப்படையாக கொண்டது.
இயற்கையான முறையில் எந்த ஒரு ரசாயனம் இல்லாத உணவு பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், Organic பொருட்கள் விற்பனை செய்பவர்களும், இயற்கையை பாதிக்காத பொருட்களும் (பாக்குமட்டை தட்டு, பேப்பர் கப், மண் பானை போன்ற eco product) தயாரிப்பவர்களும் நம் இணைய தளத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்யலாம். இயற்கை சார்ந்த பொருள் தேவைப்படும் பொதுமக்கள் நம் இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம்.
இதனால் மக்களுக்கு நேரடியாக பொருட்களை கொண்டு சேர்க்க முடியும். மக்களுக்கு இயற்கை பொருள் பற்றிய விழிப்புணர்வும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
எங்கள் நிறுவனம் தற்போது நல்ல வளர்ச்சியை கொண்டு உள்ளது, இது இன்னும் online மூலம் order செய்யும் வசதி மார்ச் 1 அன்று கொண்டுவரப்படும், மேலும் இது Mobile application வடிவிலும் கொண்டுவரப்படும்,
Offline மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.8000 மதிப்புள்ள பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்கும் இந்த இயற்கையான உணவு தேவைபடுகிறது, இதே போன்று உலகில் உள்ள அனைவர்க்கும் இயற்கை உணவு கிடைக்க வேண்டும், அணைத்து மக்களும் எங்களுடைய வாடிக்கையாளர்களே
உங்கள் நிறுவனத்தை தொடங்கியபோது எந்த மாதிரியான சவால்களை சந்தித்தீர்கள் :
இதை நான் முதலில் துவங்கும்போது பலரும் சொன்ன வார்த்தை இது தான், இந்த தொழிலை செய்யாதே கம்பு, சோளம், அரிசி, எண்ணைய் எல்லாம் மக்கள் அருகில் உள்ள கடையிலேயே வாங்கிவிடுவார்கள். உன் தொழில் வெற்றிபெறாது என்று, ஆனால் நான் அவர்களின் பேச்சை கேட்டுகொள்வேன், ஆனால் அதில் எனக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்து கொண்டேன்.
நான் என்னுடைய கடைசி தொழிலை (Home Appliances sales) தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக என்னுடைய சேமிப்பு என்று ஏதும் இல்லாமல் இருந்தது, ஒரே ஒரு இருசக்கர வாகனம் மட்டும் தான் இருந்தது, ஆனால் என்னிடம் நம்பிக்கை இருந்தது, என்னுடைய அவசர கால பணத்தை கொண்டும், என்னுடன் கூட படித்த நண்பன் எனக்கு சிறு தொகையை முதலீடாக வைத்தும் நான் தொழிலை தொடங்கி இருக்கிறேன்.
உங்கள் தொழில்முனைவினால் சமூகத்திற்கு எந்த மாதிரியான தீர்வுகள் கிடைக்கும் :
எங்கள் நிறுவனம் மூலம் அனைத்து வித மக்களுக்கும் இயற்கையான ஆரோகியமான உணவு எளிதிலும் விலை குறைவாகவும் கிடைக்கும், மேலும் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும் கிடைக்கும. மக்களின் கருத்துகளை புரிந்துகொண்டு மக்களின் முழு திருப்திக்காக Cash on delivery வசதியும் , பொருளை திரும்ப கொடுக்கும் வசதியும், பணம் திரும்ப பெரும் வசதியும் கொடுத்து உள்ளோம், மக்களின் ஆரோக்கியமும் மேம்படும் இதனால் நோய் இன்றி வாழமுடியும்.
அடுத்ததாக உலகின் முதுகெலும்பாக இருக்க கூடிய விவசாய துறை மேம்படும், விவசாயிகள் நேரடியாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதால் அவர்களின் பொருளாதாரமும் மேம்படும், ரசாயனம் இல்லாத உணவு பொருட்களை உற்பத்தி செய்வதால் உலகின் மண் வளமும் காக்கப்படும்.
ஒரு விவசாயி அவர்களின் பொருட்களை ஒரு தரகர் மூலம் விற்பனை செய்வதால் 20% முதல் 40% வரை அவர்களின் பொருட்களின் விலையை குறைத்து தரவேண்டி இருக்கும், ஆனால் நமது நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பொது மிக குறைந்த சேவை கட்டணம் மட்டுமே பெறபடுகிறது. விவசாயிகள் அவர்களின் பொருட்களின் விலையை அவர்களே தீர்மானிக்க முடியும். இதனால் விவசாயிகளும் அதிக லாபத்தில் பொருளை விற்க முடியும், மக்களும் குறைந்த விலையில் இயற்கை பொருட்களை வாங்க முடியும்.
Credits: tamilentrepreneur