தூத்துக்குடி கின்ஸ் அகாடமி கடந்த மூன்று ஆண்டுகளாக போலீஸ், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. 2019ம் ஆண்டில் நடந்த பல்வேறு தேர்வுகளுக்கான நுழைவுதேர்வில் இங்கு பயின்ற 124 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றுள்ள 124 மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழாவும், கட்டணமில்லா இணையதள சேவை துவக்க விழாவும் நாளை (22ம்தேதி) மாலை 6.01 மணிக்கு மதுரை கணேசா குரூப்ஸ் சேர்மன் மோகன் தலைமையில் நடைபெற இருக்கிறது. அரசு போட்டித் தேர்வுகள் எழுதும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியரும் தங்கள் சொந்த ஊரில் இருந்து கொண்டே படித்து தேர்வு பெறும் வகையில் கின்ஸ் அகாடமி ஒரு இலவச இணையதள சேவையை துவக்க இருக்கிறது. இணையதளத்தில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நடப்பு நிகழ்வுகள், முந்தைய தேர்வு வினாத்தாள்கள் மற்றும் கையேடுகள் போன்றவற்றை எந்தவித கட்டணமும் இன்றி டவுன்லோடு செய்து கொள்ளும் படி அமைக்கப்பட்டுள்ளது. www.khinsacademy.com என்ற கட்டணமில்லா இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் எழுதலாம்.
சென்னை அறிவியல் நகர துணைத்தலைவர் சகாயம் ஐஏஎஸ், புதிய இணையதளத்தை துவக்கி வைப்பதோடு போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி, பரிசுகள் வழங்க இருக்கிறார். மேலும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி உள்பட பல அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்கின்றனர் என கின்ஸ் அகாடமி இயக்குநர் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.