இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க முன்வந்ததுள்ளது பைஜூஸ் நிறுவனம்.
பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகும். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்குரிய ஸ்பான்சர்ஷிப்பை சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ அளித்து வருகிறது. இதற்கான உரிமத்தை 5 ஆண்டு கால அடிப்படையில் 2017-ம் ஆண்டு ஓப்போ நிறுவனம் ரூ.1,079 கோடிக்கு பெற்று இருந்தது.
இந்த நிலையில்., ஓப்போ நிறுவனம் தங்களால் இந்த தொகையினை வழங்க இயலாது என கூறி ஒப்பந்தத்திலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக தெரிவித்தது.
தற்போது இந்திய அணியின் கிரிக்கெட் சீருடைக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க தொழில்நுட்ப கல்வி நிறுவனமான பைஜூஸ் முன்வந்துள்ளது. இதனையடுத்து நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதால்; ஓப்போவின் ஸ்பான்சர்ஷிப் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து, செப்டம்பரில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அதிலிருந்து 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்திய அணியின் சீருடையில் பைஜூஸ் நிறுவனத்தின் பெயர் இடம் பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எந்த வித இழப்பும் ஏற்படாது. மேலும், ஓப்போ வழங்கிய அதே தொகையினை தான் பைஜூஸ் நிறுவனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.