தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் ஏற்கனவே தங்குகடல் அனுமதி கோரி கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. எனவே மீனவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால், தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நேற்று முதல் 60 நாட்களுக்கு விசைப்படகுகள், இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.