கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிப்பிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்தும் இன்றளவும் கண்டறியப்படவில்லை. உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு, 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை பல்வேறு சோதனை நிலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ஐதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து தயாரித்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ‛கோவேக்சின்’ என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை, அடுத்த மாதம் (ஜூலை), நாடு முழுவதும் இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரின் ஒப்புதலை பெற்றுள்ளது.

இது குறித்து பாரத் பயோடெக் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா கூறுகையில், ‛முதற்கட்ட ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கைக்குரியவையாக இருக்கின்றன. மேலும் சோதனை முடிவுகள் விரிவான பாதுகாப்பு மற்றும் பயனுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை காட்டுகின்றன,’ என்றார். கோவேக்சின் தவிர, பாரத் பயோடெக் நிறுவனமானது, ஏற்கனவே அமெரிக்காவைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான ப்ளூஜென் மற்றும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்க உள்ளது. புதிய தடுப்பூசியை உருவாக்குவதற்காக பிலடெல்பியாவில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்துடன் பிரத்யேக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.