தூத்துக்குடி மாவட்டத்தில் மே 22, 2018 அன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி மாவட்டத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது,
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 15 தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் விதமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் காலையில் வீட்டு வாசலில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கோலங்கள் போட்டும், தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாநகரம் முழுவதும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாமல் காவல்துறை தூத்துக்குடி முழுவதும் போலீசாரை குவித்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுதியுள்ளனர். பல பகுதிகளில் நினைவு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்த பொதுமக்களை மிரட்டியுள்ளனர். இறந்தவர்களின் கல்லறைக்கு பொதுமக்கள் நினைவஞ்சலி செலுத்த செல்லக்கூடாது என்று அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் தடுக்கின்றனர். இதனை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நாளில் அரசிற்கு முக்கியமான கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்:
- அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த பின்பு இன்னும் தூத்துக்குடி சிப்காட்டிலிருந்து ஸ்டெர்லைட்டை அகற்ற அரசு ஏன் மறுக்கிறது. எனவே ஸ்டெர்லைட் தூத்துக்குடி சிப்காட்டிலிருந்து அகற்ற வேண்டும்.
- உயர்நீதிமன்றம் துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டும் சுட்டவர்கள் மீதும் சுடச்சொன்னவர்கள் மீதும் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. அதனால் சிபிஐ மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.
- மேலும் 15 தியாகிகளுக்கும் தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் நினைவுச்சின்னம் வைக்க வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்கள்.