துறைமுக அதிகாரிகள் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை – தூத்துக்குடி ஹார்பர் மீனவர் காலனி மக்கள் கோரிக்கை மனு
தூத்துக்குடி துறைமுகம் விருந்தினர் மாளிகை அருகேயுள்ள கடற்கரை நுழைவு வாயிலை மூட கூடாது என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி ஹார்பர் மீனவர் காலனி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: நாங்கள் துறைமுகம் சுனாமி காலனியில் 1964ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகம் தொடங்கப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே 4 தலைமுறைகளாக குடியிருந்து வந்தோம். சுனாமி ஏற்பட்ட பின்னர் நாங்கள் தற்போது குடியிருந்து வரும் சுனாமி காலனிக்கு மாற்றப்பட்டோம். கடந்த பல ஆண்டுகளாக அமைதியான முறையில் துறைமுகம் விருந்தினர் மாளிகைக்கு பின்புற பகுதியில் கரைவழி மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.
இந்த கடற்கரை பகுதியின் நுழைவு வாயிலை மீன் வாகன போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த நுழைவு வாயிலை மூடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நுழைவு வாயில் அடைக்கப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். துறைமுக அதிகாரிகள் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. கடற்கரை பகுதி சுத்தமாகவும், அழகாகவும் இருப்பதற்கு நாங்களே காரணம். எனவே மாவட்ட ஆட்சியர் கடற்கரை நுழைவு வாயிலை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டள்ளது.